பிளேட்டோவின் கல்வித் தத்துவம்

நாம் வாழுகின்ற பூமிப்பந்திலே மிகவும் சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்கள் எனின் அது கிரேக்கர்களையே சாரும். முன்னைய காலங்களில் ஐரோப்பிய நாகரிகத்தின் தொடக்கப் புள்ளியாக விளங்கிய கிரேக்க நாடானது அரசியல் முதல் ஆராய்ச்சி வரை பல்வேறுபட்ட துறைகளில் ஐரோப்பிய நாடுகளின் வழிகாட்டியாக திகழ்ந்துள்ளது. அத்துடன் உலகிற்கு பல்துறை சார்ந்த மேதைகளையும் அளித்துள்ளது அந்தவகையில் காலம், தேசம் மற்றும் இனம் என்பவற்றையெல்லாம் கடந்து மனித இயல்புடன் வாழ்பவர்களே மகான்கள் எனப்படுவர். இத்தகைய இயல்பு பெற்றவர்களுள் ஒருவராக திகழ்பவரே கிரேக்க தேசத்தின் பிளேட்டோ ஆவார்.

பிளேட்டோவின் கல்வித் தத்துவம்

அந்தவகையிலே பிளேட்டோ கூறுகின்ற கல்வித்தத்துவம் பற்றி நோக்குகின்ற போது தன்னிடம் கல்வி கற்ற மாணவர்கள் கல்வித் தத்வம் எதுவென வினவிய போது “அது புத்தகத்தில் இல்லை அத்துடன் புத்தகத்தில் இடம்பெறவும் முடியாது ஏனைய சாத்திரங்களுக்குப் போல் இலக்கணமும் கூறமுடியாது” என எடுத்தியம்பினார். எனினும் அதனை அடையக் கூடியதற்கான பாதை அறிவினைப் பயன்படுத்தும் சுய அனுபவம் என்றார்.

அந்தவகையில் கல்வி தொடர்பாக பிளேட்டோ பல்வேறுபட்ட கருத்துக்களை 'குடியரசு, சட்டம்” ஆகிய தனது நூல்களில் வலியுறுத்தினார். கல்வி என்பது வெறுமனவே கருத்தியல் மட்டுமன்றி கருத்தியலோடு சேர்ந்த அனுபவம் என்றார். அதாவது கல்வியானது நிலையானதும் அனுபவிக்கக் கூடியதும் என்பதே பிளேட்டோவின் ஆணித்தரமான கூற்றாகும்

பிளேட்டோவின் கல்வித் தத்துவம்

பிளேட்டோ கூறும் கல்வித்தத்துவங்களில் குழந்தைகளுடைய வளர்ப்பு முறை, கல்விச் செயற்பாட்டுடன் இணைந்த இணைப்பாடவிதான செயற்பாடு, அழகியற்கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, ஆண்பெண் கூட்டுக் கல்விமுறை, தேடிக்கற்றல் கொள்கை, ஆசிரியர்வாண்மை, கல்வியில் வர்க்க ரீதயான வேறுபாட்டுத்தன்மை போன்றவை தொடர்பாகவும் பல கருத்துக்களை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளுடைய வளர்ப்பு முறை தொடர்பாக பிளேட்டோ கூறுகையில் குழந்தைகளினுடய உள்ளமானது தூய்மையானதும் நல்லெண்ணங்களைக் கொண்டதுமாகும். அதனை தவறான வளர்ப்பு முறையினாலும் அணுகுமுறையினாலும் ஆசிரியர் மாசுபடுத்தி விடுதல் கூடாது என்று கூறுகிறார். ஏனெனில் குழந்தையினுடைய உள்ளமானது வெற்றுக் குடமாகவே காணப்படும். அதில் நன்மையான விடயங்களை உள்ளடக்கும் போதே அக்குழந்தை நற்பிரஜையாக வளரமுடியும். இது பெற்றோரினதும் ஆசிரியரினதும் பொறுப்பாகும். அத்துடன் அவர் மேலும் கூறுகையில் பாடசாலைச் சூழலும் வீட்டுச் சூழலும் குழந்தைக்கு நல்ல விடயங்களை கற்றுக் கொடுத்தல் அவசியம் என்கின்றார். அத்துடன் குழந்தையானது தாயினுடைய கருவில் இருக்கும் போதே கற்றுவிடுவதாகவும் அங்கேயே குழந்தை தனது கல்வி செயற்பாட்டினை முதன் முதலில் ஆரம்பிக்கின்றது என்றும் குறிப்பிடுகின்றார். குழந்தையானது அறிவுபூர்வமானதாக பிறக்க வேண்டும் எனின் 'தாயானவள் குழந்தை கருவில் இருக்கும்போதே நல்ல இன்னிசையினை கேட்டு மகிழ்தல், நல்ல நூல்களை வாசித்தல் போன்ற விடயங்களை கைக்கொள்வது அவசியம் என்கின்றார்.

மேலும் பிளேட்டோ கூறுகின்ற கல்வித் தத்தவத்திலே உடற்கல்வி தொடர்பாகவும் வலியுறுத்தப்படுகின்றது. மாணவனானவன் கல்வி கற்பதற்கு அறிவு மட்டும் அவசியமானதன்று. உறுதியான உடலும் திடமான மனமும் அவசியம் என்கின்றார். எடுத்துக்காட்டாக ஆசிரியரால் மன உழைச்சலுக்கு உள்ளாதல், வீட்டுச் சூழலில் முரண்பாடான தன்மை காணப்படல், மாணவன் நோய்வாய்ப்பட்டுக் காணப்படுதல், போன்ற பாதகமான விளைவுகளுடன் குறித்த மாணவனால் சிறந்த முறையில் கல்வி கற்க முடியாது. இதற்கு மாணவனது ஆரோக்கியமும் உள்ளமும் ஒரு நிலைக்குட்பட்டு மகிழ்ச்சிகரமாகவும் உறுதியாக அமைதல் அவசியம் என்பதே பிளேட்டோவின் கருத்தாகும்.

பாடசாலைகள் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் இடமாகவும் அமைதல் வேண்டும் என்பதுடன் பாடசாலைகள் உளம் சார்ந்த உடற்கலை அரங்கமாகவும் விளையாட்டுக் களமாகவும் இருத்தல் வேண்டும் எனக் கூறுகின்றார். 'உடல்நோய் என்பது அறியாமையால் தோற்றுவிக்கப்படுவதுடன் அறியாமை நீங்கும் போது உறுதியும் வலுவும் பெறும் என்பது பிளேட்டோவின் கருத்தாகும். வினாக்கள் வாயிலாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்போது பல்வேறு விதமான உண்மைகளை தரிசிக்க முடியும் என்கின்றார். ஏனெனில் ஒவ்வொரு மனிதனது எண்ணங்களும் வெவ்வேறுவிதமானவை ஒவ்வொருவரும் தம்முடைய உண்மைகளைக் கூறும் போது அங்கே பல்வேறு விதமான உண்மைகள் கிடைக்கின்றன. இதனூடாக தேவையான விடயங்களை எம்மால் பெறமுடியும் என்று கூறி குழுச் செயற்பாட்டில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

பிளேட்டோ வாழ்க்கை நீடித்த கல்வி தொடர்பாகவும் வலியுறுத்துகின்றார். கல்வியானது ஒரு முடிந்துவிடும் செயற்பாடு அல்ல பாடசாலைக் கல்வி முடிந்தவுடன் புதையுண்டு போகும் விடயமாக கல்வியினை நாம் பார்க்கக் கூடாது. கல்வியில் எவ்வளவு விடயங்களை கற்கமுடியுமோ அவை அனைத்தினையும் கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று எண்ணி கற்பது அவசியம் என வாழ்க்கை நீடித்த கல்வி தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளார்

அத்துடன் மனிதன் முழுமை அடைய உடற்பயிற்சி, உளப்பயிற்சி, இசைப்பயிற்சி போன்றவை அவசியம் எனக் கூறி கல்வியுடன் இணைந்த இணைப்பாடவிதான செயற்பாட்டிற்கு பிளேட்டோ முக்கியத்தும் அளிப்பதனை காணமுடிகிறது. அழகியற்கல்வி தொர்பாக பிளேட்டோ கூறுகையில் அழகு என்பது உள்ளத்தையே அடிப்படையாகக் கொண்டது. அதாவது கலையாக்கங்கள் வடிவங்கள் என்று குறிப்பிட்டு அவை என்றும் நிலைத்துள்ள 'தாழ்ந்த நிலைப் பிரதிகளாகவும், பிரதிகளின் பிரதிகளாகவும் அமைதலை வெளிக்காட்டியுள்ளார்.

அத்துடன் அவர் கூறுகின்ற கற்றல் என்பது மகிழ்ச்சிகரமான செயற்பாடாக இருக்க வேண்டுமே தவிர துன்பகரமான செயற்பாடாக அமைதல் கூடாது எனக் குறிப்பிட்ட பிளேட்டோ ஆண், பெண் இருபாலாரும் இணைந்து கற்கும் குழுக் கற்றலை வலியுறுத்தினார். இவருடைய இக் கூற்றின் உள்நோக்கமானது ஆண், பெண் வர்க்க வேறுபாட்டினை தகர்ப்பது மட்டுமன்றி பாலியல் ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதுமாகும். ஏனெனில் தனிப்பட்ட ஆண் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு பெண் பிள்ளைகளைப் பார்க்கும் சந்தர்ப்பத்தில் வெவ்வேறு விதமான சிந்தனைகள் உருவாக வாய்ப்புண்டு. அதனால் ஆண் ,பெண் கலவன் பாடசாலையில் குழுக் கற்றலை மேற்கொள்வதனால் அவ்வாறான விடயங்கள் தடுக்கப்படுவதுடன் சகோதரர்களாகவும் மற்றம் சகோதரிகளாகவும் பார்க்கும் நிலை உருவாகும். இவ்வாறு பிளேட்டோ குழுக்கற்றலை வலியுறுத்துகின்றார்.

ஆசிரியர் வாண்மை தொடர்பாக பிளேட்டோவின் கருத்தாக ஆசிரியர் இருள் புலத்திலே ஒளியை ஏந்திச் செல்பவராகவும் வழிகாட்டியாகவும் பொருண்மை கொண்ட வினாக்களை விடுப்பவராகவும் இருத்தல் வேண்டும். 'ஒளிகாலும் விளக்கில் அறியாமை எனும் இருளை உடைத்துச் செல்லும்' எனக் கூறி ஆசிரியரை மேலான இடத்தில் வைத்துப் பார்க்கின்றார். இவருடைய கல்விக் கருத்துக்களில் வர்க்கவேறுபாடு அடிப்படையில் கல்வி வழங்குதல் எனக் கூறுவது முற்றிலும் தவறானது. மனிதர்கள் சமூகத்தில் வெவ்வேறுபட்ட பணிகளைச் செய்ய வேண்டியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஏற்ப கல்வி நிலையினை உலோக வடிவில் வடிவமைத்தார். தங்க நிலையில் அரசை நிர்வகிக்கும் ஆற்றலுடையவர்களையும், வெள்ளி நிலைப்பட்டவர்களை வர்த்தகம், இராணுவ செயற்பாடுகளுக்கும், இரும்பு நிலையில் தொழிலாளர்களுக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் கல்வி வழங்குதல் வேண்டும் எனக் கூறினார். இவர் ஓரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவரராக காணப்பட்டதால் ஏழைகளின் கல்வி நிலை பற்றி கவனம் செலுத்தவில்லை. அத்துடன் இவரது கல்வித் தத்துவங்களில் ஏழு தொடக்கம் இருபது வயது வரையுள்ள அனைவரும் கட்டாயக்கல்வி, இராணுவப்பயிற்சி மற்றும் தொழிற்கல்வி போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதும் இவரது சிந்தனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

இவ்வாறாக பலதரப்பட்ட கல்வித் தத்துவங்களை முன்வைத்த பிளேட்டோ பலவாறான எதிர்மறையான கல்வித் தத்துவங்களையும் கூறியுள்ளார். தொழிலாழி வர்க்கத்தினருக்கு சிறிதளவு கல்வி, இலக்கியக்கல்விக்கு எதிர்மறையான போக்கினை வழங்கியமை, கருத்துக்களுக்கு அதியுயர் முக்கியத்துவம் அளித்து பொருள்சார் நிலைமைகளுக்கு நடப்பியல் வாழ்வும் பிற்தள்ளப்படல், ஆசிரியர்களுக்கு நடுநாயப்படுத்தும் கல்வியே அவரால் முன்மொழியப்படல், விஞ்ஞான தொழினுட்ப கல்வித்திட்டங்கள் புறக்கணிப்பு, தனியாள் சிறப்புத்தேர்ச்சிக்கு போதுமான இடமளிக்காமை போன்றன இவரது இலட்சியவாத சிந்தனையில் குறைபாடுகளாக காணப்படுகின்றன.

சோக்கிரட்டீஸ் மரண தண்டனையால் இறக்கும் பொழுது பிளேட்டோவிற்கு 28 வயதிலே அறிவுள்ள மனிதர்களுக்கும் நிதான புத்தி உடையவர்களுக்குமான சிறந்த பண்பினை கொண்டவர்களுக்குமான புதிய ஆட்சிமுறை உண்டாக வேண்டுமென பிளேட்டோ நினைத்த பொழுதும், அவர் தனது 40 ஆவது வயதிலே குடியரசு என்னும் நூலை எழுதினார்.

சிறந்த பண்பினைக் கொண்ட அறிவுடைய நபர்களே பொதுமக்களை நல்ல முறையில் இயக்கி நாட்டினை சிறந்த முறயில் இயக்க முடியும் என்பதனை பிளேட்டோ நன்கு அறிந்திருந்தார். இந்த சிந்தனையின் அடிப்படையிலே உருவாகிய நூலே குடியரசு எனப்படும்.அறியாசனத்தில் அறிவு அமர வேண்டும் அறிவாட்சியே குடியாட்சி இதுவே பிளேட்டோவின் அறுதியும் இறுதியும் முடிவாக இருந்தது.

தான் உருவாக்கிய குடியாட்சியில் நடைமுறைக்கு சாத்தியம் அற்றது எனவும் அவற்றினை திருத்திக் கொள்வதற்கு ஏதுவாகவும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் விளைவாக சட்டம் என்னும் நூலினை தனது 70 ஆவது வயதில் பிளேட்டோ எழுதினார்.

பிளேட்டோவின் கல்வித் தத்துவம்

எவ்வாறெனினும் இன்றைய கல்விப் போக்கிற்கு வித்திட்டவராக பிளேட்டோ காணப்படுகின்றார் என்றால் மிகையாகாது. இவரதுவிடயங்களை அடிப்படையாகக் கொண்டு கல்வித்திட்டங்கள் உருவாக வழிவகுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post