Mother Teresa (அன்னை தெரசா)

Mother Teresa (அன்னை தெரசா)
இரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது எப்போது வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது.ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரேசா என்று பெயர் மாற்றிக் கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 இல் தனது 19 ஆவது வயதில் கொல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரேசா. 

அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண். சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கொல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலைமையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன. 
1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் திகதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோது தான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார். 

நலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கொல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் போய்ச் சேர்ந்தார். அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்பும் தான். கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரேசா 1950இல் Missionaries of Charity என்ற அமைப்பை உருவாக்கினார். 1952இல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம் தான் பல்லாயிரக் கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கொல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட 
சுமார் 42 ஆயிரம் ஆண்க ள், பெண்கள், சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம். சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர். ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவணைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர். 

Mother Teresa (அன்னை தெரசா)
ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காறி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும் என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்குமுக்காடிப் போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் விழுந்து கதறி அழுது வாரி வழங்கினார். 1953இல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957இல் தொழுநோயாளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா பலர் அருவறுத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது Missionaries of Charity அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடு களில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன. 

1979 இல் அமைதிக்கான நோபல் பரிசு, 1980 இல் இந்தியாவின் பாரத ரத்னா விருது, 1985 இல் அமெரிக்க ஜனாதிபதியின் சுதந்திர பதக்கம் என விருதுகளை அன்னை பெருமைப்படுத்தினார். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும் தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வர்ணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரேசா போன்றவர்களை எண்ணித்தான் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற பாடலை எழுதியிருக்க வேண்டும். 

நாம் அன்னை தெரேச போல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.

Post a Comment

Previous Post Next Post